PUBLISHED ON : டிச 05, 2024 12:00 AM

'இவர் மனதுக்குள் என்ன சோகம் இருக்கிறது என கண்டுபிடிக்க முடியவில்லையே...' என, மத்தியசாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்கரி பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியின் மற்ற தலைவர்கள்.
மஹாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியில் செல்வாக்கான அரசியல்வாதி நிதின் கட்கரி. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஆதரவு பெற்றவர். பா.ஜ., தேசிய தலைவராகவும் பதவி வகித்தவர்.கடந்த 2014 லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் கட்கரியின் பெயரும் இருந்தது.
ஆனால், பா.ஜ., தொண்டர்கள் மற்றும்மக்களிடையே மோடிக்கு இருந்த செல்வாக்கு காரணமாக, கட்கரியால் பிரதமர் வேட்பாளராக முடியாமல் போய் விட்டது. அதன்பின், தொடர்ந்து மூன்று முறை அமைந்த மோடி அரசிலும், மத்திய அமைச்சராகவே பதவி வகித்து வருகிறார், கட்கரி.
சமீபத்தில் நாக்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், 'அரசியல்வாதிகளின் ஆன்மா கடல் போன்றது. அவ்வளவு சீக்கிரம் அந்த ஆன்மாவை திருப்திப்படுத்தி விட முடியாது. கவுன்சிலராக இருப்பவர், எம்.எல்.ஏ.,வாக ஆசைப்படுவார். எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவார். அமைச்சராக இருப்பவர், முதல்வர் பதவிக்கு குறி வைப்பார். இப்படி அரசியல்வாதியின் ஆசை அளவு கடந்து இருக்கும்...' என்றார்.
இதைக் கேள்விப்பட்ட அவரது கட்சியினர், 'கட்கரி எதற்கு இவ்வளவு விரக்தியாக பேசுகிறார். ஒருவேளை அவரும் பெரிய பதவிக்கு ஆசைப்படுகிறாரோ...' என, கிண்டல் அடிக்கின்றனர்.