PUBLISHED ON : மே 24, 2026 12:00 AM

'பிரதமரே பாராட்டி விட்டார். இன்னும் சில நாட்களுக்கு எங்கள் தலைவருக்கு துாக்கமே வராது...' என, தெலுங்கு தேசம் கட்சியின் செயல் தலைவரும், ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான நர லோகேஷ் பற்றி பேசுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் அரசியல் வாரிசான அவரது மகன் நர லோகேஷ், தெலுங்கு தேசம் கட்சியின் அதிகார மையமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஹைதராபாத் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்த சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு வந்தார். அவரை சந்திரபாபுவும், அவரது மகன் நர லோகேஷும் வரவேற்றனர்.
அப்போது, நர லோகேஷை பார்த்து ஆச்சரியப்பட்ட பிரதமர், 'சில மாதங்களுக்கு முன் உங்களை பார்த்தபோது, மிகவும் குண்டாக இருந்தீர்கள். இப்போது எடையை கணிசமாக குறைத்து விட்டீர்கள் போலிருக்கிறது. சபாஷ்; இப்படித்தான் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்...' என்றார்.
இதன்பின், நர லோகேஷ் மிகவும் உற்சாகமாகி விட்டார். 'உடல் எடையை குறைப்பதற்கு, கடுமையான உடற்பயிற்சி செய்தேன். இரண்டு வேளை மட்டும் சாப்பிட்டேன். அப்போது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், பிரதமரின் பாராட்டை கேட்டதும், அந்த கஷ்டம் எல்லாம் பறந்தோடி விட்டது...' என, தன் ஆதரவாளர்களிடம் மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்.
