PUBLISHED ON : மார் 20, 2026 03:08 AM

'எத்தனை முறை தான் சொல்வது; அவர் கேட்டால் தானே...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் குறித்து கவலையுடன் புலம்புகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
குஜராத்தில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி அவதுாறாக பேசியதற்காக, தன் எம்.பி., பதவியை சில ஆண்டுகளுக்கு முன் இழந்தார், ராகுல். பின், உச்ச நீதிமன்ற உத்தரவால், அவருக்கு எம்.பி., பதவி திரும்ப கிடைத்தது.
அதேபோல், பாகிஸ்தானுக்கு எதிராக நம் ராணுவம் நடத்திய, 'சிந்துார் ஆப்பரேஷன்' குறித்து, வெளிநாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளில் ராகுல் விமர்சித்ததற்கும், நாடு முழுதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
ராகுலின் இந்த நடவடிக்கைகளால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாகினர். 'தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும், இதுபோல் அவர் நடப்பது சரியா...?' என, மூத்த தலைவர்கள் புலம்பினர்.
இந்நிலையில், பார்லிமென்ட் வளாகத்திலும் ராகுலின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து, சமீபத்தில் பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ராகுல், அதன் படிக்கட்டுகளில் அமர்ந்து டீ, பிஸ்கட் சாப்பிட்டார்.
இது தொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து, பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களோ, 'ராகுல், இன்னும் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறாரே... நாங்கள் என்ன செய்ய முடியும்...' என, புலம்புகின்றனர்.

