PUBLISHED ON : செப் 10, 2026 01:50 AM

'என்ன தான் பெரிய அரசியல் தலைவராக இருந்தாலும், நேரம் காலம் பார்த்து தான், எந்த செயலையும் செய்ய வேண்டும்...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் குறித்து கூறுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
தலைநகர் டில்லியில், செய்தியாளர்கள் சந்திப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்தால், பத்திரிகை, 'டிவி' மற்றும் சமூக வலைதளங்களைச் சேர்ந்தவர்கள் குவிந்து விடுவர்.
அதிலும், ராகுல் போன்ற தேசிய கட்சிகளின் தலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு என்றால் கேட்கவே வேண்டாம்; செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கும் அறையே நிரம்பி வழியும்; அவர்களை கட்டுப்படுத்துவதே பெரிய வேலையாகி விடும்.
இந்த சூழலில், கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார் ராகுல். செய்தியாளர்கள் குவிந்திருப்பர் என்ற நினைப்புடன் வந்த ராகுலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது; ஆங்காங்கே ஒரு சிலர் மட்டும் தான் அமர்ந்திருந்தனர். விசாரித்தபோது, 'சகோதரத்துவத்தை போற்றும் ரக் ஷா பந்தன் பண்டிகைக்காக, செய்தியாளர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்; அதனால் தான் கூட்டமில்லை...' என, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஏமாற்றம் அடைந்த ராகுல், அங்கிருந்த ஒரு சில செய்தியாளர்களிடம் பொதுவான விஷயங்களை கூறிவிட்டு, அவர்களை பற்றிய சொந்த விஷயங்களை விசாரிக்க தொடங்கி விட்டார்.
இதையடுத்து, 'சொல்ல வேண்டிய விஷயத்தை மறந்துவிட்டு, வேறு ஏதேதோ பேசிவிட்டு போகிறாரே...' என, காங்., நிர்வாகிகள் புலம்பினர்.
