PUBLISHED ON : மார் 02, 2024 12:00 AM

'நம் கட்சிக்கு தலைவர் அகிலேஷ் யாதவா, யோகி ஆதித்யநாத்தா என சந்தேகமாக இருக்கிறது...' என கவலைப்படுகின்றனர், உத்தர பிரதேசதத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகள்.
இங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்துவதற்காக காங்கிரசுடன் கைகோர்த்துள்ளது, சமாஜ்வாதி.
காங்கிரசுக்கு, 17 தொகுதிகளை ஒதுக்கியுள்ள சமாஜ்வாதி, தன் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை படிப்படியாக வெளியிட்டு வருகிறது.
முதல் கட்டமாக வெளியான வேட்பாளர்பட்டியலில் அகிலேஷின் சித்தப்பாவும், ஏற்கனவே அவருடன் மோதல் போக்கை பின்பற்றி, தற்போது சமரசத்தை எட்டியுள்ளவருமான சிவ்பால் யாதவின் பெயர் இடம் பெறவில்லை.
இதை கவனித்த முதல்வர் ஆதித்யநாத், 'சமாஜ்வாதியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. சிவ்பால் யாதவ், கட்சிக்காக கடுமையாக உழைத்தவர். அவருக்கு கூட வாய்ப்பு தரப்படவில்லை...' என, பட்டாசை பற்ற வைத்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அகிலேஷ் யாதவ், தன் சித்தப்பா சிவ்பால் யாதவ், பதான் தொகுதியில் போட்டியிடுவதாக இரண்டாவது பட்டியலை அவசரம் அவசரமாக வெளியிட நேர்ந்தது.
இதைப் பார்த்த சமாஜ்வாதி கட்சியினர், 'பரவாயில்லையே... யோகி ஆதித்யநாத் பரிந்துரைக்கும் நபர்களுக்கு உடனடியாக வாய்ப்பு கிடைக்கிறதே... இது ரொம்ப வேடிக்கையான அரசியலாக இருக்கிறது' என ஆச்சரியப்படுகின்றனர்.

