PUBLISHED ON : அக் 07, 2024 12:00 AM

'எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஒரே மர்மமாக இருக்கிறது...' என, தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா பற்றி கூறுகின்றனர், அந்த மாநில அரசியல்வாதிகள்.
தெலுங்கானாவில் செல்வாக்குடன் திகழ்ந்த சந்திரசேகர ராவ், தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் இப்போது சுருண்டு போய் கிடக்கிறார்.
இவரது மகளும், அந்த கட்சியின் எம்.எல்.சி., யுமான கவிதா, டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கி, திஹார் சிறையில் ஆறு மாதங்களாக அடைக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் தான், ஜாமினில் வெளியில் வந்தார்.
சிறையிலிருந்து வந்ததுமே, 'என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய, பா.ஜ.,வினரை சும்மா விடமாட்டேன். பொய் வழக்கு போட்டு, என்னை சிறையில் அடைத்தவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்...' என, ஆவேசமாக பேசினார்.
ஆனால், சிறையிலிருந்து வெளியே வந்ததிலிருந்து, அவரை ஆளையே காணவில்லை. பொது நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்வுகள் என எதிலுமே பங்கேற்கவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.
'ஆவேசமாக பேசிய கவிதா, இப்போது என்ன செய்கிறார்...' என, எதிர்க்கட்சியினர் கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடிக்கின்றனர்.
கவிதாவுக்கு வேண்டியவர்களோ, 'அவர், யாருடைய வம்பு தும்புக்கும் போவது இல்லை. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்...' என, பரிதாபப்படுகின்றனர்.