PUBLISHED ON : மார் 20, 2025 12:00 AM

'காங்கிரசில் அடுத்த அதிகார மையம் உருவாவதற்கான அறிகுறி தென்படுகிறது...' என்கின்றனர், டில்லி அரசியல்வாதிகள்.
காங்கிரஸ் கட்சியில், சமீபத்தில் பல பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். பொதுச் செயலராக உள்ள வயநாடு தொகுதி எம்.பி., யான பிரியங்காவுக்கும் முக்கியமான பொறுப்பு வழங்கப்படும் என, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.
காங்கிரஸ் தேர்தல் கமிட்டி பொறுப்பாளர் என்ற பதவி அவருக்கு தரப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்தன. ஆனால், அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இது குறித்து விசாரித்தபோது, முக்கியமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
இந்தாண்டு பீஹார் மாநிலத்துக்கு மட்டுமே சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது, பிரியங்காவுக்கு தேர்தல் கமிட்டி பொறுப்பாளர் பதவி கொடுத்து, இந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்றால், அவரது செல்வாக்கு கேள்விக்குறியாகி விடும். ஒரே ஒரு மாநிலத்தில் நடக்கும் தேர்தலுக்காக பிரியங்காவின் செல்வாக்கை பலி கொடுக்க காங்., தலைவர்கள் விரும்பவில்லை.
எனவே, அடுத்தாண்டு தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கும்போது, பிரியங்காவுக்கு அந்த பொறுப்பை வழங்கி, களத்தில் இறக்கி விட, காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
இதனால், உற்சாகம் அடைந்துள்ள பிரியங்கா ஆதரவாளர்கள், 'நமக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது...' என்கின்றனர்.