PUBLISHED ON : மார் 14, 2026 03:01 AM

'அரசியலில் புதுப்புது யுக்திகளை புகுத்துவதில், உத்தர பிரதேச மாநில அரசியல்வாதிகளை யாராலும் மிஞ்ச முடியாது...' என ஆச்சரியப்படுகின்றனர், அங்குள்ள மக்கள்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ஊர் ஊராக சென்று, கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். கட்சியின் மூத்த நிர்வாகிகளின் வீடுகளுக்கே சென்று, அவர்களது வீட்டில் உணவு அருந்தி, அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில், கான்பூருக்கு சென்ற அவர், சமாஜ்வாதி கட்சியின் மூத்த நிர்வாகி நடத்தி வரும் சிறிய டீக்கடைக்கு திடீர், 'விசிட்' அடித்தார். அங்கு டீ, சமோசா சாப்பிட்டு, சிறிது நேரம் உரையாடினார்.
இதையறிந்து, ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் அங்கு கூடி விட்டனர். அவர்களிடம், 'தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும்' என, சில நிமிடங்கள் பேசிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார் அகிலேஷ்.
'ஒரு பெரிய மாநாடு, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து ஆட்களை திரட்ட வேண்டும். ஆனால், ஐந்து பைசா கூட செலவு செய்யாமல் ஆட்களை திரட்டி, கட்சிக்காக பிரசாரம் செய்யும் யுக்தி, அகிலேஷ் போன்ற அரசியல்வாதிகளுக்குத் தான் கைவந்த கலை...' என்கின்றனர், உ.பி., மக்கள்.

