PUBLISHED ON : பிப் 15, 2026 05:49 AM

'அமைதியாக இருக்கும் இவர், என்னென்ன வேலைகள் செய்கிறார் பார்த்தீர்களா...' என, காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா பற்றி கூறுகின்றனர், பா.ஜ.,வினர்.
சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில், பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.,க்கள் மீது லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா குற்றம்சாட்டினார்; இதற்கு, காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, சபாநாயகர் அறைக்கு சென்று, காங்., - எம்.பி.,க்கள் அவருடன் வாக்குவாதம் செய்ததாக பா.ஜ.,வினர் புகார் கூறினர். சபாநாயகர் அறையில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் வாக்குவாதம் செய்வது போன்ற வீடியோவை, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு வெளியிட்டார்.
இந்த வீடியோ, டில்லியில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. காங்கிரஸ் பொதுச்செயலரான பிரியங்கா தான், எம்.பி.,க்களை துாண்டிவிட்டு, சபாநாயகருடன் தகராறு செய்ய வைத்ததாக கிரண் ரிஜிஜு கூறினார்.
பிரியங்காவோ, 'சபாநாயகரிடம், யாரும் தவறாக பேசவில்லை. ஒரு சில எம்.பி.,க்கள், தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். நான் அவர்களை துாண்டிவிட்டதாக கிரண் ரிஜிஜு கூறுவது பொய்...' என்றார்.
'தவறு செய்த யாரும், உண்மையை ஒப்புக்கொண்டது இல்லை. அந்த வரிசையில் பிரியங்காவும் சேர்ந்து விட்டார்...' என்கின்றனர், பா.ஜ.,வினர்.

