PUBLISHED ON : மார் 29, 2026 03:02 AM

'புதியவர், அனுபவம் இல்லாதவர் என விமர்சனம் செய்தவர்களுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளார்...' என, ஒடிஷா முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மோகன் சரண் மஜி குறித்து பாராட்டுகின்றனர், அம்மாநில மக்கள்.
ஒடிஷாவில் தொடர்ச்சியாக, 24 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தவர், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக். 2024ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,விடம் பிஜு ஜனதா தளம் தோல்வி அடைந்தது. யாரும் எதிர்பாராத வகையில், அதிகம் அறிமுகம் இல்லாத மோகன் சரண் மஜியை முதல்வராக்கியது, பா.ஜ., மேலிடம்.
'போதிய அரசியல் அனுபவமும், நிர்வாக அனுபவமும் இல்லாதவரை முதல்வராக நியமித்துள்ளனர். இவர், நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்க மாட்டார்...' என்று, எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல், மூத்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களே முணுமுணுத்தனர்.
இந்நிலையில், தான் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அதிரடியை அரங்கேற்ற துவங்கியுள்ளார், மோகன் சரண் மஜி.
சில மாதங்களுக்கு முன், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களின் மாத சம்பளம், சலுகைகள் மற்றும் ஓய்வூதியத்தை மூன்று மடங்குக்கு மேல் உயர்த்தும் மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
பொதுமக்களிடையே இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறி, தற்போது இந்த மசோதாவை வாபஸ் பெற்றுள்ளார், மோகன் சரண் மஜி. இதனால், அதிர்ச்சியான ஒடிஷா எம்.எல்.ஏ.,க்கள், 'இதை நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை...' என, கட்சி பேதமின்றி புலம்புகின்றனர்.

