PUBLISHED ON : மார் 02, 2026 01:26 AM

'வயதான காலத்தில், அவரை ஏன் தொந்தரவு செய்கின்றனர் என தெரியவில்லை...' என்று, கர்நாடகா முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பாவை பார்த்து பரிதாபப்படுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
கர்நாடகாவில், முதல்வர் சித்த ராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எடியூரப்பா, சமீபத்தில், தன், 84வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
கர்நாடகாவில், பா.ஜ.,வை ஆட்சிக்கட்டிலில் அமர்த்திய பெருமை இவருக்கு உண்டு. அரசியலில் ஆர்வம் இருந்தாலும், வயது மூப்பு காரணமாக அதில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம், எடியூரப்பாவுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, தன் மகன் விஜயேந்திராவுக்கு, கர்நாடகா மாநில பா.ஜ., தலைவர் பதவியை வாங்கி கொடுத்து விட்டு, வீட்டில் அமைதியாக ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் தான், சமீபத்தில் அவரது பிறந்த நாளையொட்டி, மத்திய அமைச்சர்கள், கர்நாடகா மாநில பா.ஜ., தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் திரண்டு சென்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ள கர்நாடகா சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்காக பிரசாரம் செய்ய வேண்டும் என்றும், அவரிடம் இப்போதே வலியுறுத்தினர்.
இதையடுத்து அவரும், 'கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்வேன்...' என, அவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
கர்நாடகா மக்களோ, 'பதவி ஆசை யாரைத்தான் விட்டது...' என, கிண்டலடிக்கின்றனர்.

