PUBLISHED ON : ஜூன் 04, 2026 12:48 AM

'அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியே இப்படி ஆகி விட்டாரே...' என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு குறித்து பேசுகின்றனர், அம்மாநில மக்கள்.
ஆந்திர முதல்வராக நான்கு முறை பதவி வகித்த பெருமைக்குரியவர், சந்திரபாபு நாயுடு. நாட்டில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில், இவரும் ஒருவர். தொழில்நுட்ப வளர்ச்சி மீது மிகுந்த ஆர்வம் உடையவர். ஆனால், இப்போதைய அரசியலில் தாக்குப்பிடிக்க, இதெல்லாம் போதாது என சந்திரபாபு நாயுடு கருதுகிறார்.
சமூக வலைதளங்கள் வாயிலாக, தன் செல்வாக்கை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். சமீபத்தில், நெல்லுார் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த சந்திரபாபு, அங்குள்ள சாலையோர மீன் கடையில் காரை நிறுத்தி, மீன்களை வாங்கினார்.
பின், அருகில் உள்ள ஒரு கிராமத்துக்கு சென்று, அங்கு குடிசை வீட்டில் இருந்த பெண்ணிடம், மீனை கொடுத்து, சமைத்து தரும்படி கூறினார். குழம்பு ரெடியானதும், அந்த வீட்டிலேயே தரையில் அமர்ந்து சாப்பிட்டார். இவை அனைத்தையும், சந்திரபாபு நாயுடுவுடன் வந்த குழுவினர் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இந்த காட்சிகளை பார்த்த ஆந்திர மக்களோ, 'குடிசை வீட்டில் மீன் குழம்பு சாப்பிட வேண்டுமானால், சத்தமில்லாமல் சாப்பிட வேண்டியது தானே; எதற்கு கேமராவுடன் ஆட்களை அழைத்துச் செல்ல வேண்டும்; இந்த விளம்பரம் தேவை தானா...?' என புலம்புகின்றனர்.
