PUBLISHED ON : பிப் 04, 2026 04:50 AM

'ஒரு பெரிய மனிதரை இப்படியா வேதனைப்படுத்துவது...' என, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேல் குறித்து பரிதாபத்துடன் பேசுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. காங்கிரஸ் தேர்தல் கமிட்டி பார்வையாளராக, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படா விட்டாலும், அசாமில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார், பாகேல். சமீபத்தில், அசாமின் குவஹாத்திக்கு சென்றிருந்த பாகேல், பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக, அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஹோட்டல் ஒன்றில் ஆலோசனை நடத்தினார்.
கூட்டம் முடிந்ததும் காரில் ஏறி புறப்பட்டார், பூபேஷ் பாகேல்; ஆனால், கார் சிறிது துாரம் சென்று நின்றது. அப்போது தான், காரின் முன்பக்க டயர் பஞ்சர் ஆகியிருந்ததை, அங்கிருந்தவர்கள் பார்த்து, பாகேலிடம் கூறினர்.
உடனடியாக காரில் இருந்து இறங்கிய பாகேல், வேறு ஒரு காரில் ஏறிச் சென்றார். இதைப் பார்த்த அங்கிருந்த சிலர், 'அசாமில் காங்கிரஸ் தோல்வி அடைவதற்கான சகுனம் தான் இது...' என, கிசுகிசுத்தனர்.
பாகேல் ஆதரவாளர்களோ, 'எந்தெந்த விஷயத்துக்கெல்லாம் சகுனம் பார்க்க வேண்டும் என்ற விவஸ்தை இல்லையா...' என, புலம்பினர்.

