PUBLISHED ON : மே 07, 2026 01:53 AM

'கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பிரச்னை யும் இல்லாமல் நிம்மதியாக இருந்தேன்; இப்போது பிரச்னை ஆரம்பித்து விட்டது...' என, பயத்தில் புலம்புகிறார், ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு மீது, பல்வேறு வழக்குகளை பதிவு செய்து தொல்லை கொடுத்தார்.
திறன் மேம்பாட்டு திட்ட நிதியை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், சந்திரபாபு நாயுடுவை கைது செய்து, நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து அலைக்கழித்தார், ஜெகன்மோகன் ரெட்டி.
கடந்த, 2024ல் நடந்த சட்டசபை தேர்தலில், சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று, முதல்வராக பதவியேற்றார். இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்த சந்திரபாபு நாயுடு, தற்போது தன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க, போலீசில் தனி குழுவை அமைத்துள்ளார். ஜெகனின் வலது கரமாக செயல்பட்டு வந்த ஸ்ரீஹரி என்பவர், முதல்வரை அவதுாறாக பேசிய வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையறிந்த ஜெகன்மோகன், 'சந்திரபாபு நாயுடு, தன் வேலையை காட்டத் துவங்கி விட்டார். அடுத்ததாக, என்னைத் தான் கைது செய்வார்...' என, புலம்புகிறார்.
