PUBLISHED ON : செப் 07, 2025 12:00 AM

'தேர்தல் நேரத்தில் பொய் பிரசாரம் செய்து, மக்களை துாண்டி விடுவதே இவருக்கு வேலையாக போய் விட்டது...' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குறித்து எரிச்சலுடன் பேசுகின்றனர், பா.ஜ.,வினர்.
மேற்கு வங்கத்தில், அடுத்த ஆண்டு மத்தியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வின் கடுமையான போட்டியை முறியடித்து, திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்த முறையும் அதேபோல் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர், பா.ஜ., தலைவர்கள்.
இந்நிலையில், சமீபத்தில் மேற்கு வங்க சட்டசபையில் திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க் களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர், 'அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, திரிணமுல் கட்சியினர் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். கொள்ளைக்காரர்களாக மாறி விட்டனர்...' என்றார்.
இதைக் கேட்ட மம்தா பானர்ஜி, 'மேற்கு வங்க மக்களை பா.ஜ.,வினர் கொள்ளைக்காரர்கள் என அவதுாறாக பேசுகின்றனர்...' என்று சாமர்த்தியமாக, இந்த விவகாரத்தை திசை திருப்பினார்.
பா.ஜ.,வினரோ, 'பொய் சொல்வதற்கு ஒரு அளவே இல்லையா... இப்படியெல்லாம் பேசித்தான் தேர்தலில் மம்தா ஜெயிக்க வேண்டுமா...?' என, காட்டமாக கூறுகின்றனர்.