PUBLISHED ON : டிச 17, 2024 12:00 AM

'குஷி வந்தால் அரசியல்வாதிகள் கவிஞர்களாகமாறி விடுகின்றனர்...' என, கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவகுமார் பற்றி கூறுகின்றனர், அங்குள்ள மக்கள்.
இங்கு, முதல்வர்சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிநடக்கிறது. கர்நாடகாவில்,2023ல் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்ததும், முதல்வர் பதவியை பெறுவதற்கு சித்தராமையா, சிவகுமார்இடையே கடும் போட்டிநிலவியது.
ஒரு வழியாக சித்தராமையா முதல்வராக,சிவகுமார், துணை முதல்வராக பதவியேற் றனர். முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கு சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார், சிவகுமார்.
இந்த நேரத்தில் தான், சமீபத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.இதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், சித்தராமையாவிடம் இருந்து முதல்வர் நாற்காலி பறிக்கப்படும்என்ற பேச்சு இருந்தது. ஆனால், மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதை எப்படி எதிர்கொள்வது என சிவகுமாருக்குதெரியவில்லை. சோகமாக இருந்தால், கட்சியினர் தவறாக நினைப்பர் என கருதிய சிவகுமார், மகிழ்ச்சியாகஇருப்பது போல் காட்டிக் கொண்டார்.
இதற்காகவே ஒரு கவிதையை எழுதி, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். 'இந்த இடைத்தேர்தலில், பா.ஜ.,வின் தாமரை சின்னம் சகதியில் சிக்கி விட்டது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் நெற்கதிர்கள் சின்னம் அழுகி விட்டது. மக்களைகாக்கும் காங்கிரசின் கை சின்னம் சாதித்து விட்டது...' என, அதில் சிவகுமார் குறிப்பிட்டிருந்தார்.
சக அரசியல்வாதிகளோ, 'இது, மகிழ்ச்சியில் எழுதியதா அல்லது விரக்தியில் எழுதியதா...' என, கிண்டல் அடிக்கின்றனர்.