PUBLISHED ON : ஆக 10, 2026 01:14 AM

'தனித்து போட்டியிட்டால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பது, இரு தரப்புக்குமே தெரிந்து விட்டது...' என, பா.ஜ., மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சியினரைப் பற்றி கூறுகின்றனர், பஞ்சாப் மாநில மக்கள்.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு பல ஆண்டுகளாக, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் கட்சியினர் தான், மாறி மாறி ஆட்சி செய்து வந்தனர்.
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், 25 ஆண்டுகளாக அங்கம் வகித்த சிரோமணி அகாலி தளம், 2020ல் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணியில் இருந்து வெளியேறியது.
அதன்பின் நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில், இந்த இரண்டு கட்சிகளுமே படுதோல்வியை சந்தித்தன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 2022 சட்டசபைத் தேர்தலில், ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து விட்டது.
'இனியும் தனியாக தேர்தலை சந்திப்பது, அரசியல் தற்கொலைக்கு சமம்' என்பதை, இரண்டு கட்சிகளின் தலைவர்களும் தற்போது உணர்ந்து விட்டனர். இதையடுத்து, பிரதமர் மோடியை, சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் சமீபத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது, கூட்டணியை மீண்டும் புதுப்பித்து, 2027ல் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை, இரண்டு கட்சித் தலைவர்களும் உணர்ந்து விட்டனர்' என்கின்றனர், இந்தக் கட்சிகளின் தொண்டர்கள்.
