PUBLISHED ON : ஜன 11, 2026 03:30 AM

'அதிகாரம் கையில் இருந்தால், என்ன வேண்டுமானாலும் செய்யலாமா...' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளை பார்த்து கொந்தளிக்கின்றனர், அங்குள்ள பா.ஜ.,வினர்.
மேற்கு வங்கத்தில், வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் தற்போதே அனல் பறக்கும் நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில், திரிணமுல் காங்., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரும், தேர்தல் வியூகம் வகுக்கும், 'ஐ - பேக்' நிறுவனத்தின் இயக்குநருமான பிரதீக் ஜெயின் வீடு, அலுவலகம் உட்பட, 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர்.
ஊழலில் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய், 'ஐ - பேக்' நிறுவனத்துக்கு கைமாறியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, அதிரடியாக, 'ஐ - பேக்' அலுவலகத்துக்குள் நுழைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, அங்கு கைப்பற்றி வைக்கப்பட்டு இருந்த முக்கிய ஆவணங்கள், 'லேப்டாப்'கள் மற்றும் கோப்புகளை அதிரடியாக பறித்து சென்றார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். 'என்ன தான் முதல்வராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானே... ஊழலை மறைக்க, மம்தா பானர்ஜி அரசியல் நாடகமாடுகிறார்...' என, மேற்கு வங்க பா.ஜ., தலைவர்கள் குமுறுகின்றனர்.

