PUBLISHED ON : ஏப் 24, 2026 12:57 AM

'பதவி விலகும் நேரத்தில், எங்களுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தி விட்டாரே...' என, பீஹார் முன்னாள் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் பற்றி கவலையுடன் கூறுகின்றனர், அம்மாநில அரசு டாக்டர்கள்.
பீஹாரில், முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், நிதிஷ் குமார் முதல்வராக பதவி வகித்தார். இவர், பீஹாரில் அதிக ஆண்டுகள் பதவி வகித்த முதல்வர் என்ற பெருமைக்குரியவர்.
பீஹாரில், 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நிதிஷ் குமார், சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார்; தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.
நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் இருந்து விலகியதற்கு, ஆளும் கூட்டணிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக கூறப்பட்டாலும், ஏற்கனவே ஞாபக மறதியால் அவதிப்பட்டு வரும் அவருக்கு, இது பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன், அவசரம் அவசரமாக ஒரு கோப்பில் கையெழுத்திட்டார். 'பீஹார் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், இனி வெளியில் சொந்தமாக மருத்துவமனை நடத்துவதோ அல்லது வேறு மருத்துவமனைகளில் பணிபுரிவதோ தடை செய்யப்படுகிறது' என்பது தான், அந்த கோப்பின் முக்கிய அம்சம்.
அரசு டாக்டர்களோ, 'எல்லாருக்கும் நல்ல மனிதராக இருந்த நிதிஷ் குமார், கடைசி நேரத்தில் எங்களை பழி வாங்கி விட்டாரே...' என, புலம்புகின்றனர்.

