PUBLISHED ON : பிப் 27, 2026 04:04 AM

'மாநிலத்தின் பெயரை மாற்றும் விஷயத்தில் கூட, மத்திய அரசு எங்களிடம் அரசியல் நோக்கத்துடன், பாரபட்சமாக செயல்படுகிறது...' என, கோபத்தில் குமுறுகிறார், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.
கேரள மாநிலத்தின் பெயரை, 'கேரளம்' என மாற்றம் செய்யக்கோரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன், கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது.
இதை பரிசீலித்த மத்திய அரசு, பெயர் மாற்றம் செய்ய, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த விவகாரம், மேற்கு வங்க மாநில ஆளுங்கட்சியான திரிணமுல் காங்., கட்சியினரிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
திரிணமுல் கட்சியினர் கூறுகையில், 'மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, 'பங்க்ளா' என மாற்றும்படி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். எங்களின் கோரிக்கையை மத்திய அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை. பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில், மேற்கு வங்கத்துக்கு ஒரு நீதி, கேரளாவுக்கு ஒரு நீதியா...' என, கொந்தளிக்கின்றனர்.
மத்திய அரசு தரப்பிலோ, 'பங்க்ளா என்ற வார்த்தையும், நம் அண்டை நாட்டின் பெயரான பங்களாதேஷ் என்பதும் ஒரே மாதிரி உள்ளன. இதில் குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, மேற்கு வங்க அரசின் தீர்மானம் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, இதில் அரசியலும் இல்லை; ஒரு கத்தரிக்காயும் இல்லை...' என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

