PUBLISHED ON : பிப் 24, 2026 12:29 AM

'நெருக்கடி வரும்போதெல்லாம் கண்ணீர் வடித்து அனுதாபம் தேடிக் கொள்கிறார்...' என, கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா பற்றி கூறுகின்றனர், அவரது அரசியல் எதிரிகள்.
சித்தராமையாவிடம் இருந்து எப்படியாவது முதல்வர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்பதில், துணை முதல்வரும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருமான சிவகுமார் தீவிரமாக இறங்கியுள்ளார்; இது, சித்தராமையாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, 'நான் சிறுவயதில் ஆடு மேய்த்தவன்; வறுமையில் வாடியவன். இப்போது நான் முதல்வராக பதவி வகிப்பதை, ஒரு சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
'அரசியல் ரீதியாக என்னை முடக்கி விட்டால், நம் பாதை எளிதாகிவிடும் என்று அவர்கள் நினைக்கின்றனர். நான் யாருக்கும் அடிமை இல்லை. போர்க்களத்தை விட்டு ஓடும் கோழையாக என்னால் இருக்க முடியாது...' என, உணர்ச்சி பொங்க அறிக்கை வெளியிட்டுள்ளார், சித்தராமையா.
'உண்மையிலேயே சித்தராமையாவுக்கு பயம் வந்து விட்டது; அதனால் தான், இப்படி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது போன்ற அவரது பழைய தந்திரங்கள், இனி கர்நாடக மக்களிடம் எடுபடாது. கண்களை கசக்கி கசக்கி இனி காலம் தள்ள முடியாது...' என, சிவகுமாரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

