PUBLISHED ON : ஆக 14, 2026 01:17 AM

'பிரதமரே பாராட்டி விட்டார் என்பதால், மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்...' என, ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் செயல் தலைவருமான நாரா லோகேஷ் பற்றி கூறுகின்றனர், அந்தக் கட்சியின் நிர்வாகிகள்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - பா.ஜ., - ஜனசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சந்திரபாபு நாயுடு, தனக்குப் பின், தன் மகனை கட்சித் தலைவராக்கும் முயற்சியில் உள்ளார்.
சமீபத்தில், விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழாவுக்காக பிரதமர் மோடி வந்திருந்தார். இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், லோகேஷ் தான் செய்திருந்தார். விழா முடிந்ததும் லோகேஷை அழைத்த பிரதமர் மோடி, 'நன்றாக வேலை செய்துள்ளீர்கள்; சபாஷ்...' என, கைகொடுத்துப் பாராட்டு தெரிவித்தார்.
இதற்கு முன், கடந்த ஜூன் 21ல் விசாகப்பட்டினத்தில் நடந்த சர்வதேச யோகா தின விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காகவும், லோகேஷை பிரதமர் மோடி பாராட்டியிருந்தார்.
'மீண்டும் மீண்டும் பிரதமர் மோடியின் பாராட்டு மழையில் நனைவதால், லோகேஷுக்கு தேசிய அளவில் முக்கிய பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது...' என, உற்சாகத்துடன் கூறுகின்றனர், தெலுங்கு தேசம் கட்சியினர்.
