PUBLISHED ON : ஜூலை 18, 2026 02:31 AM

'எங்கள் கட்சிக்கு உள்ள நற்பெயரை கெடுப்பதே, சிலருக்கு வேலையாக போய் விட்டது...' என கொதிக்கிறார், தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் எம்.பி.,யான சுப்ரியா சுலே.
மஹாராஷ்டிரா மாநிலத்தில், பா.ஜ., வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. சரத் பவார் தலைமையில் செயல்பட்டு வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை, அவரது உறவினரும், மஹாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித் பவார், இரண்டாக உடைத்தார்.
பின், தேசியவாத காங்கிரஸ் கட்சியையும், அதன் சின்னத்தையும் அஜித் பவார் கைப்பற்றினார். இதனால், 'தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார்' என்ற பெயரில், சரத் பவார் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
தொடர் தோல்விகளால் சரத் பவார் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் சிலர், சமீபத்தில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் வீட்டுக்கு ச் சென்று, அவரை சந்தித்து நீண்ட நேரம் பேசியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், சரத் பவார் கட்சி இணையப் போவதாகவும், பார்லிமென்டில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள அனைத்து மசோதாக்களுக்கும் ஆதரவு தரப் போவதாகவும் தகவல்கள் பரவின.
இதனால், ஆவேசம் அடைந்த சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, 'எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வதந்தி பரப்புவது, எதிர்க்கட்சிகளுக்கு கைவந்த கலையாகி விட்டது...' என புலம்புகிறார்.
