PUBLISHED ON : ஜன 11, 2025 12:00 AM

'எவ்வளவு வலை வீசினாலும் சிக்க மாட்டேங்கிறாரே...' என, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் பற்றி கவலையுடன் பேசுகிறார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
நிதிஷ் குமாரை, பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேற்றி, தங்களின், 'இண்டியா' கூட்டணிக்கு கொண்டு வரும் முயற்சியில், கடந்த சில மாதங்களாகவே தீவிரமாக செயல்பட்டு வருகிறார், முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி.
தற்போது, பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ள தேஜஸ்வி, எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விட துடியாய் துடிக்கிறார்.
நிதிஷ் குமாரை தங்கள் கூட்டணிக்கு இழுத்து விட்டால், முதல்வராகி விடலாம் என கணக்கு போட்டு காய் நகர்த்துகிறார், தேஜஸ்வி. இதற்காக, சமீபத்தில் தன் தந்தை லாலு பிரசாத் யாதவை விட்டு, கூட்டணிக்கு துாது விட்டார்.
முதலில், பிடி கொடுக்காமல் பேசிய நிதிஷ் குமார், சில நாட்களுக்கு பின், 'ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன், இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை...' என, திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதையடுத்து, 'முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற நம் லட்சியம், வெறும் கனவாகவே போய் விடுமோ...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார் தேஜஸ்வி.