PUBLISHED ON : அக் 27, 2024 12:00 AM

'இவர்கள் எதற்கு தனித்தனி கட்சியாக செயல்பட வேண்டும்... ஒரே கட்சியாக இணைந்து செயல்படலாமே...' என, கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பற்றி கிண்டல் அடிக்கின்றனர், பா.ஜ.,வினர்.
இங்கு, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இடதுசாரி கட்சிகளும், காங்கிரசும் தேசிய அளவில், 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகித்தாலும்,கேரளாவில் மட்டும் எதிரெதிர் துருவங்களாக செயல்படுகின்றன.
கேரளாவில் சமீபகாலமாக பா.ஜ.,வும் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் கூட, திருச்சூர் தொகுதியில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்; தற்போது, மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சராகவும் உள்ளார்.
இதனால், கேரளாவில் மாற்று சக்தியாக பா.ஜ., உருவெடுத்து விடுமோ என, மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கவலைப்படுகின்றனர்.
பல ஆண்டுகளாக பரம விரோதிகளாக மோதிக் கொண்டிருந்த இந்த இரண்டு கட்சியினரும், சமீபகாலமாக நட்பு பாராட்டத் துவங்கி உள்ளனர்; மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களிலும், இரு தரப்பினரும் இணைந்து செயல்படுகின்றனர்.
இதை பார்த்த கேரள மாநில பா.ஜ., தலைவர்சுரேந்திரன், 'எதிரிகள் ஒருவருக்கு ஒருவர் கைகோர்க்கின்றனர் என்றால், எங்களை பார்த்து பயப்படுகின்றனர் என்று அர்த்தம். வரும், 2026ல் கேரளாவில் எங்கள் ஆட்சி தான்...' என, பெருமிதத்துடன் கூறுகிறார்.