PUBLISHED ON : ஏப் 06, 2026 03:19 AM

'திடீரென வார்த்தை தவறி பேசினால் கூட, அதையும் அரசியலாக்கி விடுகின்றனர்...' என கவலைப்படுகிறார், தெலுங்கானா முதல்வரும், காங்கிரசை சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டி.
தெலுங்கானா மாநில தலைநகர், ஹைதராபாதில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரேவந்த் ரெட்டி, 'நம் நாட்டில், 28 மாநிலங்கள் உள்ளன. இவற்றில், தெலுங்கானாவில் மட்டும் தான் கடற்கரை இல்லை...' என்றார்.
இதை பார்த்த, தெலுங்கானா மாநில எதிர்க்கட்சியான, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவர், கே.டி.ராமா ராவ், 'நம் நாட்டில், தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் தான் கடற்கரை இல்லை என ரேவந்த் ரெட்டி கூறுகிறார். ஆனால், பல மாநிலங்களில் கடற்பகுதியே இல்லை.
'சில மாதங்களுக்கு முன் ரேவந்த் ரெட்டி ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'தெலுங்கானா, மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட மாநிலம்' என, தவறாக கூறினார். எதையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல், மாற்றி மாற்றி பேசுகிறார்.
'புவியியல் ரீதியான விஷயத்தில் கூட அடிப்படை அம்சங்களை தெரிந்து வைத்திருக்காமல், வாய்க்கு வந்ததை அடித்து விடும் ரேவந்த் ரெட்டியை முதல்வராக பெற்றிருப்பது, நம் துரதிர்ஷ்டம்...' என, காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.
ரேவந்த் ரெட்டியோ, 'இனிமேல் பொதுவெளியில் எந்த விஷயத்தை பேசினாலும், அதை பற்றி நன்றாக படித்து தெரிந்து விட்டுத் தான் பேச வேண்டும்; இல்லையெனில், மானம் கப்பலேறி விடும்...' என, புலம்புகிறார்.
