PUBLISHED ON : ஏப் 18, 2026 12:00 AM

'தந்தை வழியில் மகன்...' என்று, சிவசேனா உத்தவ் பாலா சாகேப் கட்சியின் இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரேயை கிண்டல் அடிக்கின்றனர், அங்குள்ள மக்கள்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மறைந்த பால் தாக்கரேயால் நிறுவப்பட்டது, சிவசேனா கட்சி. அவரது மறைவுக்குப் பின், அவரது மகன் உத்தவ் தாக்கரே, அந்த கட்சியின் தலைவரானார்.
தற்போது, சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து விட்டது. அதிகாரப்பூர்வமான சிவசேனா, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வசம் உள்ளது. இதனால், உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா உத்தவ் பாலா சாகேப் என்ற பிரிவு செயல்பட்டு வருகிறது.
இந்த கட்சியின் இளைஞரணி தலைவராக, உத்தவின் மகன் ஆதித்ய தாக்கரே பதவி வகித்து வருகிறார். உத்தவ் தாக்கரேக்கு உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படுவதால், தன் மகன் ஆதித்யாவிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னோட்டமாக, ஆதித்யாவை, தங்கள் கட்சியின் செயல் தலைவராக நியமிக்க, உத்தவ் தாக்கரே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் செயல்பட்டு வரும் சிவசேனா கட்சியினர், 'உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்படுவது அரசியல் கட்சியல்ல; தனியார் நிறுவனம். அதனால் தான், தலைமை பொறுப்பேற்க, தன் வாரிசை தயார்படுத்தி வருகிறார், உத்தவ் தாக்கரே...' என்று கிண்டல் அடிக்கின்றனர்.

