PUBLISHED ON : அக் 11, 2024 12:00 AM

'ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர்; இனி கவனமாகஇருக்க வேண்டும்...' என, தன் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார், தெலுங்கானா முதல்வரும், காங்கிரசை சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டி.
தெலுங்கானாவில், காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து, மத்திய விசாரணை அமைப்புகளானஅமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவை, காங்., கட்சியினருக்கு பெரிய அளவில் குடைச்சல்கொடுக்கவில்லை.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும் மற்ற மாநிலங்களில், இந்த விசாரணைஅமைப்புகள் அடிக்கடி சோதனைகள் நடத்தி, தொல்லை கொடுத்து வந்தன; ஆனால், தெலுங்கானாவில் மட்டும் அமைதி நிலவியது. இதனால், 'மத்திய அரசுக்கும், ரேவந்த் ரெட்டிக்கும் ஏதோ மறைமுகமான புரிதல் இருக்கிறதோ...' என, பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தான், தெலுங்கானா வருவாய்த்துறை அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான ஸ்ரீனிவாச ரெட்டிக்கு சொந்தமான, 10க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத் துறையினர் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில், அவரது வீட்டில் இருந்த பல விலை உயர்ந்த பொருட்களை அள்ளிச் சென்றனர். 'எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம்' என்ற பேச்சும் உள்ளது.
இதனால், கலக்கம் அடைந்துள்ள ரேவந்த் ரெட்டி, 'அமலாக்கத் துறையினர் அடுத்து நம்மை குறி வைக்கலாம்; எனவே, உஷாராக இருக்க வேண்டும்...' என, தன் கட்சியினரை எச்சரித்து உள்ளார்.

