PUBLISHED ON : ஜன 26, 2025 12:00 AM

'இதை எங்களாலேயே நம்ப முடியவில்லையே...' என, ஒடிசா முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக்கை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள்.
ஒடிசாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அசைக்க முடியாத செல்வாக்குடன் வலம் வந்த, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விடம் ஆட்சியை பறிகொடுத்தது.
'நவீன் பட்நாயக்கிற்கு 78 வயதாகி விட்டது. ஏற்கனவே அவருக்கு உடல்நலம் சரியில்லை; இனி அவர், தீவிர அரசியலில் இருந்து படிப்படியாக ஒதுங்கி விடுவார்...' என, அவரது கட்சியினரே கூறி வந்தனர்.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்ற அவர், ஆளுங்கட்சியினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், அனல் பறக்க பேசி வருகிறார்.
மாவட்ட வாரியாக உள்ள பிரச்னைகளை கண்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண வலியுறுத்தி, போராட்டம் நடத்தும்படி கட்சியினருக்கு உத்தரவிடும் நவீன் பட்நாயக், அந்த போராட்டங்களில் தானும் பங்கேற்று, அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்புகிறார்.
இதை பார்த்த நவீன் பட்நாயக்கின் கட்சி நிர்வாகிகள், 'திடீரென என்ன மாற்றம் நடந்தது; புது ரத்தம் பாய்ச்சியது போல் சுறுசுறுப்பாக செயல்படுகிறாரே...' என, ஆச்சரியப்படுகின்றனர்.