PUBLISHED ON : ஏப் 05, 2026 02:22 AM

'விழ வேண்டிய ஓட்டுகளையும் கெடுத்து விடுவார் போலிருக்கிறதே...' என, ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, அசோக் கெலாட் பற்றி கவலை தெரிவிக்கின்றனர், கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது; இங்கு வரும், 9ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
கடந்த, 10 ஆண்டுகளில் நிறைவேற்றிய நலத்திட்டங்கள், தங்களை மீண்டும் அரியணையில் ஏற்றிவிடும் என்ற நம்பிக்கையுடன், இடதுசாரி கட்சியினர் உள்ளனர். காங்கிரஸ் கட்சியினரோ, '10 ஆண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை, எங்களை ஆளும் கட்சியாக்கும்...' என்கின்றனர்.
காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் சமீபத்தில் கேரளாவுக்கு வந்தார். அப்போது அவர், 'கேரளாவில் சுகாதார திட்டங்கள் மோசமாக உள்ளன. மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை. ஆனால், ராஜஸ்தானில் சுகாதார திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப் படுகின்றன. இந்த விஷயத்தில், மற்ற மாநிலங்களுக்கு ராஜஸ்தான் முன்னோடி மாநிலமாக உள்ளது...' என்றார்.
இதை கேட்ட கேரள காங்கிரஸ் நிர்வாகிகள், 'ராஜஸ்தானில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கு சுகாதார திட்டங்கள் சிறப்பாக இருப்பதாக, இங்கு வந்து கூறினால் என்ன அர்த்தம்... இவரை யார் இங்கு பிரச்சாரத்துக்கு அனுப்பியது...' என, புலம்புகின்றனர்.

