PUBLISHED ON : அக் 20, 2024 12:00 AM

'பெயருக்கு தான் முதல்வராக இருக்கிறேன்...' என புலம்புகிறார், பஞ்சாப் முதல்வரும், ஆம்ஆத்மியை சேர்ந்தவருமான பகவந்த் சிங் மான்.
பஞ்சாபில் கடந்த முறைநடந்த சட்டசபை தேர்தலில்,அங்கு பல ஆண்டுகளாக கோலோச்சி வந்த கட்சிகளான அகாலி தளம், காங்கிரஸ் ஆகியவற்றை முறியடித்து, ஆட்சியை பிடித்து அசத்தியது ஆம் ஆத்மி. இது, பஞ்சாபில் உள்ள அரசியல்வாதிகளுக்குமட்டுமல்ல... நாடு முழுதும்உள்ள மற்ற முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் அதிர்ச்சியை அளித்தது.
முதல்வர் பதவிக்கு பலமுக்கிய புள்ளிகள் முட்டி மோதிய நிலையில், மேடைகளில் காமெடி நிகழ்ச்சி நடத்தி பிரபலமான பகவந்த் சிங் மானை அந்த பதவியில் அமர்த்தினார், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திய பகவந்த் சிங், தனக்கென ஒரு அதிகார வட்டத்தை உருவாக்கினார்.தன் மனைவி குர்பிரீத் கவுருக்கு அரசியலில் முக்கியத்துவம் அளித்தார்; இதுதவிர, தனக்கெனஇரண்டு உதவியாளர்களை அமர்த்தி, அவர்களுக்கும் சகல அதிகாரங்களை கொடுத்தார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கி,சிறையில் இருந்து வெளியில் வந்த கெஜ்ரிவாலுக்குஇந்த தகவல்கள் தெரியவரவே, அந்த இரண்டு உதவியாளர்களையும் வீட்டுக்கு அனுப்ப உத்தரவிட்டார்; மேலும், பகவந்த் சிங் மனைவி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதித்தார்.
இதனால் கடுப்பான பகவந்த் சிங், 'எந்த அதிகாரமும் இல்லாத இந்த முதல்வர் பதவி எதற்கு...' என, எரிச்சலுடன் கூறுகிறார்.