PUBLISHED ON : செப் 18, 2026 02:07 AM

'வரும், 2029ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தல் வரை, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, நம் கூட்டணியில் நீடிக்குமா...?' என சந்தேகப் படுகின்றனர், பா.ஜ., தலைவர்கள்.
பீஹாரில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ் குமாரிடம் இருந்த முதல்வர் பதவியை பறித்து, சாம்ராட் சவுத்ரிக்கு கொடுத்ததில் இருந்தே, இரு கட்சிகளுக்கும் இடையே பனிப்போர் நீடிக்கிறது.
இந்நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நாடு முழுதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும், ஒரே மாதிரியான சட்ட நடைமுறைகள் வழங்குவதே இதன் நோக்கம்.
பா.ஜ., ஆளும் மாநிலங்களின் சட்டசபைகளில் பொது சிவில் சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக, தங்களின் கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களிலும் இந்த சட்டத்தை நிறைவேற்ற, பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது.
ஆனால், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'பீஹாரில் பொது சிவில் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம்...' என, அந்த கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
'இப்படியே போனால், 2029 வரை இந்த கூட்டணி நீடிக்காது' என, பா.ஜ., தலைவர்கள் புலம்புகின்றனர்.
