PUBLISHED ON : ஆக 20, 2026 12:59 AM

'இனியும் பழம் பெருமை பேசி, காலம் கடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டார் போலிருக்கிறது...' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் பற்றி கூறுகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.
தொடர்ந்து, மூன்று லோக்சபா தேர்தல்களில் தோல்வியை சந்தித்த காங்., பல மாநில சட்டசபை தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து வருகிறது.
ஆனாலும், '20 ஆண்டுகளுக்கு முன், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் நாங்கள் தான் ஆளுங்கட்சியாக இருந்தோம்...' என, காங்., தலைவர்கள் தொடர்ந்து பெருமை பேசி வருகின்றனர்.
கட்சியில் உள்ள சில நிர்வாகிகளோ, 'இன்றைய இளம் தலைமுறையினரை கவரும் வகையில் கட்சியை வழிநடத்தவில்லை என்றால், அடுத்த லோக்சபா தேர்தலுக்கு பின், காங்., காணாமல் போய்விடும்...' என, ஆதங்கப் படுகின்றனர்.
இதையடுத்து, தன் செயல்பாடுகளை ராகுல் மாற்ற துவங்கியுள்ளார். கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களை மையமாக வைத்து நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். 'இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ்' போன்ற சமூக வலைதளங்களிலும், அன்றாட அரசியல் நிகழ்வுகள் தொடர்பான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
'இளைய தலைமுறையினரை கவர்ந்து விட்டால் ஆட்சியை பிடித்து விடலாம் என ராகுல் நினைக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெறுமா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...' என்கின்றனர், காங்., நிர்வாகிகள்.
