PUBLISHED ON : ஏப் 09, 2026 04:18 AM

'மறுபடியும் களத்திற்கு வந்துள்ளார். இந்த முறை என்ன நடக்கிறது என பார்ப்போம்...' என, மேற்கு வங்க மாநில பா.ஜ., முன்னாள் தலைவர் திலீப் கோஷ் பற்றி கூறுகின்றனர், அங்குள்ள பா.ஜ., தொண்டர்கள்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும் 23 மற்றும் 29 தேதிகளில், இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
கடந்த, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்கிரசுக்கு, பா.ஜ., கடும் போட்டியாக இருந்தது. பெரும்பாலான கருத்து கணிப்புகளும், பா.ஜ.,வுக்கு சாதகமாகவே இருந்தன. அப்போது, மேற்கு வங்க பா.ஜ., தலைவராக இருந்த திலீப் கோஷ், முதல்வர் கனவில் மிதந்தார்.
ஆனால், தேர்தல் முடிவுகள், பா.ஜ.,வுக்கு சாதகமாக இல்லை; மீண்டும் திரிணமுல் காங்கிரசே ஆட்சி அமைத்தது. இதையடுத்து, பா.ஜ., மாநில தலைவர் பதவியில் இருந்து, திலீப் கோஷ் துாக்கியடிக்கப்பட்டு, ஓரம்கட்டி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது நடக்கவுள்ள தேர்தலுக்காக, ஐந்து ஆண்டுகளுக்கு பின், மீண்டும் திலீப் கோஷை களத்தில் இறக்கியுள்ளது, பா.ஜ., மேலிடம். இந்த முறை, காரக்பூர் சதார் சட்டசபை தொகுதியில், வேட்பாளராகவும் அவர் நிறுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து, 'கடந்த முறை எங்கள் தலைவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை. இந்த முறை அதிர்ஷ்ட காற்று வீசினால், கண்டிப்பாக அவர் தான் முதல்வர்...' என்கின்றனர், திலீப் கோஷ் ஆதரவாளர்கள்.
