PUBLISHED ON : ஜூலை 03, 2026 01:06 AM

'இந்த முறை எங்கள் குறி தப்பாது...' என, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குரின் ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
ஹிமாச்சல பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான பிரேம்குமார் துமாலின் மகன் தான், அனுராக். அரசியலில் காலடி எடுத்து வைத்ததுமே, அனுராக்கின் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசியது.
பா.ஜ., தேசிய இளைஞர் அணி தலைவர், லோக்சபா எம்.பி., என பதவிகள் கிடைத்தன. 2019ல், மோடி இரண்டாவது முறையாக பிரதமரானபோது, அனுராக் சிங்கிற்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது.
அமைச்சர் பணியை திறம்பட செய்தார். லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தார். ஆயினும், 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, மோடி அமைச்சரவையில் அனுராக்கிற்கு இடம் அளிக்கப்படவில்லை.
இது, பா.ஜ.,வில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சி பணிகளில் அனுராக் தொடர்ந்து வேகம் காட்டி வருகிறார். இதனால், விரைவில் நடக்கவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, மீண்டும் பதவி கிடைக்கும் என்ற பேச்சு அடிபடுகிறது.
'மத்திய அமைச்சரவையில் எங்கள் தலைவருக்கு இடம் கிடைப்பது உறுதி; அப்படி இல்லாவிட்டாலும், அடுத்தாண்டு நடக்கவுள்ள ஹிமாச்சல் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், எங்கள் தலைவர் தான் முதல்வர்...' என்கின்றனர், அனுராக் ஆதரவாளர்கள்.
