PUBLISHED ON : ஜன 04, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
பச்சை நிறமே... பச்சை நிறமே
தாவர இலைகள் பச்சை நிறத்தில் இருப்பதற்கு காரணம் அதிலுள்ள பச்சையம். ஆனால் இலையில் மேல்பகுதி ஒருவித பச்சை நிறத்திலும், கீழ்பகுதி ஒருவிதமாகவும் இருக்கும். ஒளிச்சேர்க்கை மூலம் தாவரத்துக்கு உணவு தயாரிக்க இலையின் மேல்பகுதி உதவுவதால், குளோரோபில் எனும் பச்சையம் கூடுதலாக இருக்கும். எனவே இலைகளின் மேல் பகுதி அடர் பசுமை நிறமும், கீழே வெளிர் பசுமை நிறமாகவும் காணப்படும். அதே போல இளம் இலைகளில் பச்சையத்தின் அடர்த்தி குறைவாக இருப்பதால் வெளிர் நிறமும், முதிரும்போது, அடர்த்தி கூடி கரும் பச்சையாகவும் மாறும்.
தகவல் சுரங்கம்
உலக பிரெய்லி தினம்
பார்வையற்றோர் விரல்களால் தடவிப்பார்த்து படிப்பதற்கு ஏற்ற 'பிரெய்லி' எழுத்து முறையை உருவாக்கிய லுாயி பிரெய்லியின் பிறந்தநாள் (ஜன.,4 ) உலக பிரெய்லி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. லுாயி பிரெய்லி 1809 ஜன. 4ல் பிரான்சில் பிறந்தார். மூன்று வயதில் தையல் ஊசி கண்ணில் குத்தியதால் பார்வையை இழந்தார். கல்வி கற்க விரும்பிய இவர், பார்வையற்றோருக்கான வாலன்டின் ஹேய் எழுத்து முறை கடினமாக இருந்ததால், தானே ஒன்று முதல் ஆறு புடைப்பு புள்ளிகளை கொண்டு எழுதும் புதிய முறையை உருவாக்கினார். இதற்கு பிரெய்லி முறை என பெயரிடப்பட்டது.