/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
மாணவர்கள் மீது அக்கறை உள்ள நாளிதழ் 'தினமலர்'
/
மாணவர்கள் மீது அக்கறை உள்ள நாளிதழ் 'தினமலர்'
PUBLISHED ON : டிச 30, 2025 12:07 AM

பவள விழா காணும் தினமலர் நாளிதழுக்கு, பிரியதர்ஷினி சில்க்ஸ் நிறுவனத்தின் அன்பான வணக்கங்கள், வாழ்த்துகள். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில், தினமும் அதிகாலையில் பூக்கும் முதல் பூ, தினமலர்.
பள்ளி பருவம் முதலே, ஒவ்வொருவருக்கும், அவரவர் வாழ்க்கை பருவத்திற்கு ஏற்ப தினமலரில் ஒரு பகுதி உண்டு. அந்த வகையில், சிறுவர் மலர், மாணவ பருவத்தில் என்னை படிக்க துாண்டியது. அதில் உள்ள நீதிக் கதைகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுமே மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும், தன்னிம்பிக்கையையும் போதிக்கின்றன. கல்லுாரி பருவ நாட்களில், வாரமலர் எனக்கு கிடைத்த வரமாக தெரிந்தது. அதன் மூலம் பல்வேறு பொது விஷய அறிவையும், உலக அறிவையும் வளர்த்துக் கொள்ள முடிந்தது. மாணவர் பருவம் தாண்டி, வாழ்க்கையை துவங்கிய பிறகு, தினமலரின் ஒவ்வொரு பக்கமும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்கு தினமலர் எடுக்கும் முயற்சிகளை பாராட்டாமல் இருக்க முடியாது. தினமலரின் தனி மாணவர் இதழான 'பட்டம்' குறிப்பிடத்தக்கது. அதை பெற முடியாத மாணவர்களுக்காக, திங்கள் தோறும், தினமலர் இதழிலும் 'பட்டம்' என்று தலைப்பிட்டு ஒரு பக்கம் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 'பட்டம்' நடத்தும் வினாடி வினா போட்டிகள் பற்றி தெரியாத பள்ளிகள் இன்றில்லை. இது தவிர, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை மாணவர்களுக்காக தொடர்ந்து நடத்துகிறது.
போட்டிகள் தவிர, ஜெயித்துக் காட்டுவோம், வழிகாட்டி, நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ் என பல வழிகாட்டி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. அவற்றின் வாயிலாக தேர்வில் எப்படி வெற்றி பெறலாம், என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கு கிடைக்கிறது. படிப்பின் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை ஊக்குவித்து, சிறந்த தலைமுறையை உருவாக்கும் நோக்கத்தில், தினமலர் இவற்றை செய்து வருகிறது.
மாணவர்கள் மீதும், அதன் நீட்சியாக தமிழகத்தின் எதிர்காலம் மீதும், தினமலர் வைத்திருக்கும் அக்கறை பாராட்டத்தக்கது. அதே போல் பாராட்டத்தக்கது, கட்சி பாகுபாடின்றி செய்தி வெளியிடும் பாங்கு.
இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர இருக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற எந்த பாகுபாடும் பார்க்காமல், நடுநிலையோடு தேர்தல் செய்திகளையும், அரசியல் செய்திகளையும் வழங்கும் தினமலர், என்றைக்கும் மக்களுக்கான நாளிதழாக நுாற்றாண்டை நோக்கி வெற்றி நடை போடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
உங்களில் ஒருவன்,
எம்.ஜி.சுரேஷ்குமார்
நிறுவனர், பிரியதர்ஷினி சில்க்ஸ், சென்னை

