PUBLISHED ON : டிச 18, 2025 12:00 AM

எனக்கு பூர்வீகம் ஆந்திரா என்றாலும், இரு தலைமுறைகளுக்கு முன்பாகவே எங்கள் முன்னோர் தமிழகம் வந்து விட்டனர். அதனால், தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தோடு எங்கள் குடும்ப வாழ்க்கை முறையும் பின்னிப் பிணைந்து விட்டது. அப்படி பிணைந்த ஒன்று தினமலர் வாசிப்பு. துவக்கத்தில் நிறைய தமிழ் நாளிதழ்களை படித்தேன். அதில் தினமலரும் ஒன்று. என்னவோ தெரியவில்லை. தினமலர் நாளிதழை படிக்கத் துவங்கியது முதல், மற்ற நாளிதழ்களைக் காட்டிலும், தினமலர் மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. இன்று வரை படித்துக் கொண்டே இருக்கிறேன்.
படிக்கும் எந்த செய்தியிலும் அலுப்பு தட்டியதில்லை. நிறைவை மட்டுமே பெற்றிருக்கிறேன். தினமலரில் குறிப்பிட்ட இந்த செய்திகளை மட்டும் தான் படிக்கலாம் என முடிவெடுத்து, எதையும் விட்டு விட முடியாது. எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையானதை பக்கம் பக்கமாக வடிவமைத்துக் கொடுக்கும் பாங்கு அலாதியானது. அனுபவப்பூர்வமாக உணர்ந்து இதை சொல்கிறேன்.
தினமலரில் பிடித்த முக்கியமான விஷயம், ஒவ்வொரு செய்தியையும் தேசியத்துக்கு பங்கம் வராமல் வெளிப்படுத்துவது. தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை பின்புலத்தில் வைத்துக் கொண்டே, தினமலர் செயல்படுவது நாட்டுக்கான நன்மையாகத்தான் பார்க்கிறேன். அதற்காக, தினமலர் நிர்வாகத்தை பாராட்ட கடமைபட்டிருக்கிறேன்.
வாரமலரில், 'அன்புடன் அந்தரங்கம்' பகுதியை, குடும்பத்தில் இருப்போர் அனைவரும் படித்து, ரசித்திருப்பதை பார்த்திருக்கிறேன். அப்பகுதியில் அலசப்படும் பிரச்னைக்கு, இறுதியில் நல்ல தீர்வு சொல்லப்படுவது அருமை.
என் முன்னோர்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டவர்கள். அதனால் எனக்கும் பள்ளி பருவம் முதலே அரசியலில் ஈர்ப்பு வந்தது. முழுநேர அரசியல்வாதியான பின், கட்சி சார்பில் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. எந்த பிரச்னைக்கும் கருத்து சொல்லும்போது, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கருத்து சொல்ல வேண்டியது முக்கியம். கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து விலகாமல், கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயமும் எனக்கு உண்டு. அதனால், முக்கியமான நிகழ்வுகளுக்கு, அரசியல் ரீதியில் நடக்கும் சம்பவங்களுக்கு கருத்து சொல்வதற்கு முன்பாக, தினமலரில் பணியாற்றும் என்னுடைய நண்பர்கள் சிலரை தொடர்பு கொண்டு, அவர்களுடைய கருத்து மற்றும் ஆலோசனைகளை கேட்டு, என் கருத்தை வெளிப்படுத்துவது வாடிக்கை. இதை எதற்கு சொல்கிறேன் என்றால், அந்த அளவுக்கு ஆழமான சிந்தனை படைத்தவர்கள் அவர்கள். அதோடு, ஒரு கருத்தை எப்படி சொன்னால், அது மக்களை எளிதாக சென்றடையும் என்ற நுணுக்கங்களை அறிந்த அவர்களின் சிந்தனைகளை கண்டு பலமுறை வியந்திருக்கிறேன்.
தினமலர் எப்போதும் அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்படுவதை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுக்கு தயாராகும் முனைப்பில் இருக்கும் இளைய தலைமுறைக்கு உதவிடும் நோக்குடன், 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' என்ற தலைப்பிட்டு ஆண்டு தோறும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த நிகழ்ச்சிக்கு, சில நேரங்களில் நானும் உதவி இருக்கிறேன். நிகழ்ச்சி நடக்கும்போது, இளைய தலைமுறையினரோடு நானும் அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்திருக்கிறேன். தேர்வுக்கு தயாராகும் நிலையை கடந்து விட்டதை எண்ணி வருத்தப்பட்டிருக்கிறேன். அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக அந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதுபோல, பல பயனுள்ள நிகழ்ச்சிகளை தினமலர் தொடர்ச்சியாக நடத்த வேண்டும்.
தினமலர் குறித்து சொல்ல இப்படி எத்தனையோ நல்ல விஷயங்கள் உள்ளன. இதனால் தான், இந்நாளிதழ் 74 ஆண்டுகளைக் கடந்து பத்திரிகையுலகில் வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இது போல, பல நூறு ஆண்டுகளை கடந்தும், தினமலர் சாதனை படைக்கும். இந்த நல்ல நேரத்தில் தினமலரை வாழ்த்துவது எனக்கு கிடைத்த பெருமை. மனமார வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு.
இப்படிக்கு,
அமர் பிரசாத் ரெட்டி,
மாநில செயலர், தமிழக பா.ஜ.,

