/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
தலைமுறை கடந்த தேடல்; தொழில்நுட்பம் கடந்த பிணைப்பு
/
தலைமுறை கடந்த தேடல்; தொழில்நுட்பம் கடந்த பிணைப்பு
PUBLISHED ON : பிப் 20, 2026 12:08 AM

நான் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர். இன்று நான் இந்த நிலையில் இருந்தாலும், எனது இந்த வளர்ச்சியின் பின்னணியில் 'தினமலர்' நாளிதழுடனான நீண்ட கால தொடர்பு ஒளிந்திருக்கிறது.
எனது 6ம் வகுப்பு பருவத்திலேயே செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை எனது பள்ளி ஊக்கப்படுத்தியது. அப்போது, எனது பெற்றோரின் முதல் தேர்வாக இருந்தது தினமலர் நாளிதழ்தான். அதனால், பள்ளி பருவம் முதல் தொழில் முனைவு வரை என்னுடன் தினமலர் இருந்திருக்கிறது.
ஒரு மாணவியாக, அதில் வரும் கல்வி செய்திகள், வினாடிவினா என, தொடங்கிய எனது ஆர்வம்; கல்லுாரி காலத்தில் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியது. கல்லுாரி நாட்களில் போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்த கட்டுரைகள் எனக்கு பேருதவியாக இருந்தன.
இன்று ஒரு வணிக நிறுவனத்தை தொடங்கி, அதை நிர்வகிக்கும் நிலையில், முதலீடுகள் மற்றும் உலகளாவிய சந்தை மாற்றங்களை அறிந்துகொள்ள, தினமலர் சிறந்த தளமாக இருக்கிறது.
தினமலரின் ஆகச்சிறந்த அம்சம் என்னவென்றால், அது அனைத்து வயதினரையும் அரவணைத்துச் செல்வதுதான்.
மாணவர்களுக்கு கல்வி மற்றும் பொது அறிவு; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல்; முதியோருக்கு ஆன்மிகம், ஜோதிடம் மற்றும் ஆரோக்கியம்; விளையாட்டு ஆர்வலர்களுக்கு உடனுக்குடன் களச்செய்திகள்.
காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதில் தினமலர் எப்போதும் முன்னோடிதான். அச்சு ஊடகத்தை தாண்டி, கைபேசி செயலி மூலமாக செய்திகளை தந்ததில், தமிழின் முதல் டிஜிட்டல் முன்னெடுப்பு தினமலருக்கு உரியது என்றே நான் கருதுகிறேன்.
75 ஆண்டுகளை கடந்து, பவள விழா காணும் தினமலர், காலத்திற்கேற்ற புதிய மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மூலம் இன்னும் பல தலைமுறைகளுக்கு தகவல்களை கொண்டு சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
காபியோடு தினமலர் என்று விடியும் எனது பொழுது என்ற, பந்தம் என்றென்றும் தொடர வேண்டும்.
பிரியதர்ஷினி சூரியநாராயணன் நிறுவனர், கிளாரிஸ்கோ சொல்யூஷன்ஸ் (பி) லிமிடெட், மதுரை.

