/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
சமரசம் செய்துகொள்ளாத சமூக பார்வை
/
சமரசம் செய்துகொள்ளாத சமூக பார்வை
PUBLISHED ON : பிப் 27, 2026 12:01 AM

வரலாற்றின் ஒவ்வொரு புள்ளியும் எங்கோ எப்போதோ நடந்த நிகழ்வுகள்தான். நிகழ்வுகளைச் சுவைபடத் தொகுத்துச் சுவாரஸ்யமான செய்திகளாக மாற்றித் தருவது அரிய கலை. அவ்வாறு தொகுத்துத் தரும்போது உண்மைகளை ஓங்கி ஒலிப்பதுடன் உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஒரு நாளிதழுக்கான அடிப்படை இலக்கணம். அந்தவகையில் உள்ளூர் முதல் உலகின் கடைக்கோடிப் பகுதிவரை நொடிக்குநொடி நிகழும் அனைத்துச் செய்திகளுக்கும் இடமளித்து உலகையே உள்ளங்கையில் கொண்டு வந்து சேர்ப்பது தினமலரின் சிறப்பு.
வெறுமனே செய்திகளை மட்டும் வெளியிடாமல் அதன் பின்புலத்தை ஆராய்வது, எதையும் புதிய கோணத்தில் அணுகுவது, சமரசம் செய்துகொள்ளாத சமூகப் பார்வையோடு செயல்பட்டு உண்மையின் உரைகல்லாக விளங்குவது தினமலரின் தனித்தன்மைகளாக இன்றுவரை இருந்து வருகின்றன.
அறிவை விரிவு செய்து, அரிய சாதனைகளை படைக்க விரும்பும் அனைவருக்கும், அறிவு பொக்கிஷமாய் மிளிர்வது 'தினமலர்' நாளிதழ். நடப்பு நிகழ்வுளோடு, பல்சுவை கட்டுரைகள் மற்றும் தரவுகளின் பெட்டகமாக வெளிவரும் தினமலர், சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி ரசிக்கும் வகையில் வெளிவருவது வரவேற்கத்தக்கது. எழுத்து சீர்திருத்தத்தில் தொடங்கி, வடிவமைப்பு, உள்ளடக்கம் என வாசகர்களின் மாறி வரும் தேவைகளை உணர்ந்து, கால மாற்றத்துக்கு ஏற்ப, தன்னை மெருகேற்றி, மாற்றிக்கொண்டு இருப்பதே தினமலரின் வெற்றிக்கு முழுமுதல் காரணம்.
பொதுமக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி, கள ஆய்வுகளோடு செய்தி கட்டுரைகளை வெளியிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுபோய், தீர்வு காண்பதில் மக்களுக்கும் அரசுக்குமான இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனை மையமிட்ட இந்த அணுகுமுறையால் தான், அது 'மக்களின் நாளிதழ்' என்று போற்றப்படுகிறது.
பள்ளி பருவத்தில், எனது தந்தையார் முனைவர் கோ. விசுவநாதன் அவர்கள், அறிமுகப்படுத்திய நாளிதழ் வாசிப்பே இன்றுவரை என்னை இயங்க வைக்கும் சக்தியாக இருந்து வருகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும், நாளிதழ்களை, குறிப்பாக தினமலரை வாசிக்காமல், அன்றைய நாளை தொடங்கியதில்லை. அந்த அளவிற்கு எங்கள் குடும்பத்தோடும் நடைமுறை வாழ்வியலோடும் இணைந்து பயணித்து வருகிறது. எங்கள் விஐடி நிறுவனத்தோடு இணைந்து, மாணவர் நலன் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை, தொடர்ச்சியாக தினமலர் ஒருங்கிணைத்து நடத்திவருவதும் போற்றத்தக்கது.
தினமலரை தமிழர்களின் உரிமை மீட்பு குரலாகவே, தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் தோற்றுவித்தார் என்பது வரலாற்றுண்மை. தோன்றிய நாள் முதல் இன்றுவரை அவர் காட்டிய பாதையில் இருந்து விலகாமல், சமூக பிரச்சனைகளுக்கு எதிரான கூர்தீட்டிய போர்வாளாக செயல்பட்டு வருகிறது. தமிழ் சமூகம் தலைநிமிரவும், விழிப்புணர்வு பெறவும் பெரும் பங்களிப்பை கொடுத்து வரும் தினமலர், பல தடைகளைக் கடந்து பவளவிழா ஆண்டில் அடியெடுத்து வைப்பது பாராட்டத்தக்கது. நாளிதழ் உலகில் தனித்தடம் பதித்துவரும் தினமலர் மென்மேலும் சிறக்கவும், தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணிக்கவும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன் :
முனைவர் ஜி.வி. செல்வம்
துணைத்தலைவர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் தலைவர், வேலூர் பன்னாட்டுப் பள்ளி, சென்னை

