/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி பங்காரு கால்வாய் சீரமைப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி பங்காரு கால்வாய் சீரமைப்பு
PUBLISHED ON : அக் 16, 2024 12:00 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் உருவாகும் கூவம் ஆறு, பேரம்பாக்கம், சத்தரை, அகரம், அதிகத்துார், மணவாளநகர், புதுச்சத்திரம், அரண்வாயல், மதுரவாயல், கோயம்பேடு வழியாக, சென்று நேப்பியர் பாலம் அருகே வங்க கடலில் கலக்கிறது.
இந்த கூவம் ஆற்றில் ஜமீன் கொரட்டூர் பகுதியில் இருந்த தடுப்பணை, 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்தது.
இதையடுத்து, 2021, ஜனவரியில் 29 கோடி ரூபாய் மதிப்பில், 110 மீட்டர் நீளத்தில் தடுப்பணையும், இருபுறமும் தலா 15 மீட்டர் நீளத்தில் கதவணையும் சேர்த்து மொத்தம், 140 மீட்டர் நீளத்தில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது.
இதில், கூவம் ஆற்றில் வரும் நீர் எப்போதும் செல்லும் வகையிலும், அணைக்கட்டு பகுதியில் உள்ள ஷட்டர்கள் திறக்கப்பட்டால், பங்காரு கால்வாய் மூலம் மேல்மணம்பேடு, நேமம், குத்தம்பாக்கம் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வௌ்ள நீர் செல்லும்.
இந்த பங்காரு கால்வாய் பராமரிப்பில்லாததால், மணல் மற்றும் புதர் மண்டிக் கிடப்பதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு கால்வாயை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், மழைநீர் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து நேற்று மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி, நீர்வள ஆதாரத்துறையின் பங்காரு கால்வாய் பகுதியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சேகரமான மணல் மற்றும் புதர்களை, ஜே.சி.பி., இயந்திரம் மூலம், கொட்டும் மழையிலும், பணியாளர்கள் சீரமைத்து வருகின்றனர்.