PUBLISHED ON : ஆக 09, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்:'சென்னையில் வெள்ளம் வந்த போது வழங்கப்பட்ட நிவாரணம் 5,000 கோடி ரூபாய் என்ன ஆனது?' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். ஆனால், தி.மு.க., தரப்பிலோ, தமிழக அரசு தரப்பிலோ இன்று வரை பதில் இல்லையே... ஏன்?
டவுட் தனபாலு: இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க... அடுத்தும், சென்னையில் வெள்ளம் வரும்... அப்பவும் மத்திய அரசு கேள்வி கேட்கும்...வழக்கம்போல மாநில அரசு, 'திருதிரு'ன்னு முழிக்கும்... வெள்ளத்தில், வருஷத்துக்கு ஒரு முறை மிதந்து தான் ஆகணும் என்பது சென்னையின் தலைவிதியாகவே மாறிடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ.,வை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா: முந்தைய வங்கதேச அரசுடன், வடகிழக்கு மாநிலங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு இருந்தது; இதனால், இப்பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் ஊடுருவல்கள் தடுக்கப்பட்டன.தற்போது வங்கதேசத்தில் நிலைமை சரியில்லை. இதே நிலை நீடித்தால், அது வடகிழக்கு மாநிலங்களை பாதிக்கும்.
டவுட் தனபாலு: உங்க கவலை நியாயமானது தான்... ஆயினும், மோடி தலைமையில்நடக்கிற மத்திய அரசு வடகிழக்கு மாநிலங்களைஅம்போவென விட்டு விடாது... உங்களது பாதுகாப்பான வாழ்க்கைக்கு மத்திய அரசு பக்கபலமாக இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: ஆவின் பால் பொருட்களின் தரம் குறித்த கருத்து கேட்பு கூட்டம், சென்னையில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதுகுறித்து முறையான அறிவிப்பை, ஆவின் நிர்வாகம் வெளியிடவில்லை. அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத், இணை இயக்குனர் பொற்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தை நடத்தினர். இதில், தங்களுக்கு வேண்டப்பட்ட சில நுகர்வோரை மட்டும் அழைத்திருந்தனர். ஆவின் பொருட்கள் தரம் குறித்து நல்ல கருத்துகளை மட்டும் அவர்கள் கூறினர்; குறைகளை சுட்டிக்காட்டவில்லை.
டவுட் தனபாலு: அதானே... நிஜமான ஆவின் நுகர்வோரைஅழைத்திருந்தால், ஆவின் பொருட்களின் தரம் பத்திதாறுமாறா திட்டி தீர்த்திருப்பாங்களே... கருத்து கேட்பு கூட்டத்தை கமுக்கமா நடத்தியதில் இருந்தே, ஆவின் பொருட்களின் தரத்தை இனியும் உயர்த்துற எண்ணம் அவங்களிடம் இல்லை என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுதே!