PUBLISHED ON : மார் 09, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: தி.மு.க., எத்தனை கட்சியோடுகூட்டணி வைத்தால் என்ன; மக்கள் ஓட்டளிக்க தயாராக இல்லை. ஏற்கனவே, தமிழக அரசியல் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்றே இருந்தது. மக்களும், மூன்று தலைவர்களுக்குமாக ஓட்டளித்தனர். இப்போது, அந்த நிலை மாறி, ஸ்டாலினா, பழனிசாமியா என பார்க்கின்றனர். இருதரப்புக்குமாகத்தான் ஓட்டளிப்பர். அதனால், மற்றவர்களுக்கு இங்கு வேலை இல்லை.
டவுட் தனபாலு: 'நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்'னு கிராமங்கள்ல சொல்லுவாங்க... தமிழகத்துல தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையில் நடக்கிற மொழிப் போராட்டத்தை பார்த்தால், 2026 சட்டசபை தேர்தல் களம், ஸ்டாலினா, அண்ணாமலையா என்று தடம் மாறிப் போகுதோ என்ற 'டவுட்' இவருக்கு வரலையா?
பத்திரிகை செய்தி: விருதுநகரில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் சால்வை அணிவிக்க, வரிசையில் வராமல் குறுக்கே புகுந்து வந்த எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய துணை செயலர் நந்தகுமாரை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தது, கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
டவுட் தனபாலு: இதே ஜெ., இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும்...? அறைஞ்ச ராஜேந்திர பாலாஜியின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டு, கடைக்கோடி தொண்டராகியிருப்பாரு... அவரிடம் அடி வாங்கியவர், மாவட்ட செயலர் பதவிக்கு வந்திருப்பாரு... ஆனா, பழனிசாமி நிர்வாகத்துல இதெல்லாம் நடக்குமா என்பது, 'டவுட்'தான்!
பொள்ளாச்சி தொகுதி தி.மு.க., - எம்.பி., ஈஸ்வரசாமி: தமிழகத்தை பொறுத்தவரை, இருமொழிக் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும், ஹிந்தி மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை. அதை கட்டாயப்படுத்தி திணிக்கும் போதுதான் எதிர்க்கின்றனர். தமிழ் மொழியை ஒழிக்கவே, மத்திய அரசு மூன்றாவது மொழியாக ஹிந்தியை திணிக்கிறது. ஹிந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம்.
டவுட் தனபாலு: மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை தான் வலியுறுத்துது... எந்த இடத்துலயும், மூணாவது மொழியா ஹிந்தி படிக்கணும்னு சொல்லவே இல்லை... 'அரண்டவன்கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'னு சொல்ற மாதிரி, உங்களது காமாலை கண்ணுக்கு தான் அது, ஹிந்தியா தெரியுது என்பதில், 'டவுட்'டே இல்லை!