PUBLISHED ON : ஜூலை 20, 2011 12:00 AM

சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி: நில மோசடி தனிப்பிரிவில், தற்போது, 90 புகார்கள் வந்துள்ளன.
புகார்கள் குறித்து தனிப்பிரிவு போலீசார் விசாரித்து, 18 பேரை கைது செய்துள்ளனர். மேலும், நடவடிக்கை தொடர்கிறது. மோசடியில் கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மதிப்பு அவ்வப்போது மாறுவதால் உறுதியாக கூற முடியாது.
டவுட் தனபாலு: உண்மையாவே இவ்ளோ புகாரும், இவ்ளோ கைதும் தான் நடந்ததா...? இல்லை, அம்மா ஆசியோட தொடங்கப்பட்ட பிரிவு பத்தி, முதல் முறையா வாய் திறக்கிறோம்... எல்லாமே கூட்டுத்தொகை ஒன்பது வர்ற மாதிரி நல்லா இருக்கும்னு நினைச்சு சொன்னீங்களா...?
இ.கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன்: மருந்தாளுனர்கள் பணியில் சேர, பல பிரிவினருக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. முற்பட்ட வகுப்பினருக்கு தளர்வு இல்லை. மருத்துவ சேவைக்கு வருவோரை பிற்போக்கு, முற்போக்கு என்றெல்லாம் பிரிக்க வேண்டாம். அவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்று பார்த்தால் போதும்.
டவுட் தனபாலு: என்ன அருமையான இட ஒதுக்கீட்டுத் தத்துவம்... மருத்துவத் துறையில மட்டும், பிற்பட்டோர், முற்பட்டோர் பார்க்க வேண்டாம்; தகுதி இருந்தா போதும்... மத்த துறையில எல்லாம், பிற்பட்டோர், முற்பட்டோர் பார்க்கணும்; தகுதியே வேண்டாம்... அப்படித்தானே...!
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி: கறுப்புப் பணத்தையும், பயங்கரவாத நிதிப் பரிமாற்றங்களையும் ஒழிக்க, சர்வதேச தரத்திலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக, சர்வதேச நிதி நடவடிக்கை குழுவின் பரிந்துரைக்கேற்ப, ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: ஆக மொத்தம் நீங்களா எதுவும் செய்ய மாட்டீங்க... உலக நாடுகள் எல்லாம் ஏதாவது செஞ்சப்புறம், உள்ளூர்க்காரங்க எல்லாரும் பத்திரமா பதுக்கி வச்சப்புறம், நீங்க சட்டத் திருத்தம் கொண்டு வந்தா என்ன, கொண்டு வராட்டா என்ன...?

