PUBLISHED ON : பிப் 10, 2024 12:00 AM

பிரதமர் நரேந்திர மோடி: ஆறு முறை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். உடல்நலம் சரியில்லாத நிலையிலும், சக்கர நாற்காலியில் வந்து, இங்கு ஓட்டளித்தவர். ஜனநாயகம் தொடர்பான விவாதம் நடக்கும் போதெல்லாம், அவருடைய பெயர் நிச்சயம் நினைவுக்கு வரும். அவர் இந்த சபைக்கும், நாட்டுக்கும் ஆற்றிய பணிகள் அபாரமானவை. சபையின் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து, அவர் அளித்த பங்களிப்பு அளப்பரியது.
டவுட் தனபாலு: 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என, எங்க ஊர் அண்ணாதுரை சொன்ன அரிய தத்துவத்தை, 'திராவிட மாடல்' ஆட்சி நடத்துறவங்க மறந்தாலும், நீங்க மறக்கலை என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., இளைஞர் மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி: என் மீது ஜோடிக்கப்பட்ட பொய் வழக்குகளை போடுவதன் வாயிலாக, என் செயல்பாடுகளை முடக்கலாம் என நினைக்கின்றனர். அதெல்லாம் நடக்காது. தேர்தலுக்கு முன், என்னை கைது செய்ய வேண்டும் என மாநில அரசு துடிக்கிறது. யார் வீட்டிலாவது தண்ணீர் வரவில்லை என்றால் கூட, அதற்கும் என் மீது தான் வழக்கு போடுவர்.
டவுட் தனபாலு: தமிழக பா.ஜ.,வில் எத்தனையோ தலைவர்கள் இருக்கிற சூழல்ல, உங்களை மட்டும் மாநில அரசு ஏன் குறி வைக்கணும்...? விளம்பர வெளிச்சத்துக்காக, நீங்களே வீண் வம்புகளை விலை கொடுத்து வாங்குறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
பத்திரிகை செய்தி: கடந்த 2014 முதல் பா.ஜ.,வுடன் இணக்கமாக இருந்தும், பா.ம.க.,வுக்கு பா.ஜ., எதுவும் செய்யவில்லை. இந்த முறை முன்கூட்டியே சில உறுதிமொழிகளைப் பெற வேண்டும் என்பதில், ராமதாஸ், அன்புமணி இருவரும் உறுதியாக உள்ளனர். எனவே, கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தலைவர் நட்டா அல்லது அவர்களின் நேரடி பிரதிநிதிகளிடம் மட்டுமே பேச வேண்டும் என்பதிலும், அவர்கள் உறுதியாக உள்ளனர்.
டவுட் தனபாலு: தமிழக நலனுக்கான திட்டங்களையா உறுதிமொழிகளா கேட்டுட போறாங்க... 'அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுத்து, மத்திய கேபினட் அமைச்சர் பதவியும் தரணும்' என்பது தான் அவங்களின் நிபந்தனையாக இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!