PUBLISHED ON : மே 09, 2025 12:00 AM

தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜா: லோக்சபா, ராஜ்யசபாவில் பா.ஜ.,வைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களெல்லாம் வாரிசு என்பதன் அடிப்படையிலேயே அரசியலில் பொறுப்புக்கு வந்தவர்கள். ஆனால், தி.மு.க.,வில் அப்படியில்லை. இளம் வயதில் இருந்து உழைப்பை கொடுத்து, அரசியல் செய்து, படிப்படியாக வளர்ந்து உச்சத்தை தொட்டிருப்பவர் நம் முதல்வர் ஸ்டாலின்.
டவுட் தனபாலு: கட்சிக்கு கடுமையாக உழைத்து, படிப்படியாக வளர்ந்தவர் முதல்வர் ஸ்டாலின் என்பதில் யாருக்கும் எந்த, 'டவுட்'டும் இல்லையே... ஆனா, அவரது மகன் உதயநிதியும், தந்தை போல படிப்படியாக வளர்ந்து, உச்ச பதவியை பிடிச்சிருக்காரா என்ற, 'டவுட்'டுக்கு தங்களிடம் பதில் இருக்குதா?
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் களத்தில் தாக்கு பிடித்து, அங்கீகாரம் பெற்றுள்ளோம்; இவற்றை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். பா.ஜ., அரசின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அதிகாரி என்னுடன் பேசி, பா.ஜ., கூட்டணிக்கு அழைத்தார்; வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு வந்து விட்டேன். சனாதன சக்திகள் ஒருபோதும் வெல்லக்கூடாது. அவர்களை வி.சி., வீழ்த்தியது என்ற சாதனையை நாம் செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: 'துணை முதல்வர் பதவி தர்றேன்னு சொல்லி, அ.தி.மு.க.,வுல கூப்பிட்டாங்க'ன்னு ஒருநாள் சொல்றீங்க... மறுநாள், 'பா.ஜ., தரப்புல கூப்பிட்டாங்க'ன்னு சொல்றீங்க... இவை எல்லாம் நிஜமா, பொய்யான்னு ஆளுங்கட்சி தரப்பு, உளவுத்துறையை விட்டு தீர விசாரிக்கும் என்பதை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி: தேசிய அளவில், மத்திய அரசால் நடத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் கிடைக்கும் விபரங்கள், தேசிய அளவில் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிப்பதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். எனவே, தமிழகத்தில் அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூக நீதி வழங்க வசதியாக, மாநில அரசின் வாயிலாக ஜாதிவாரி சர்வே நடத்த முன்வர வேண்டும். மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னதாகவே, இதை நடத்தி முடிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: மத்திய அரசு நடத்தப்போற ஜாதிவாரி கணக்கெடுப்புலயே என்னென்ன பிரச்னைகள் வெடிக்கப் போகுதுன்னு தெரியலை... இதுல, மாநில அரசையும் கணக்கெடுப்பு நடத்தச் சொல்றீங்களே... விபரம் தெரிஞ்சே, உரலுக்குள்ள யாராவது தலையை விடுவாங்களா என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?

