PUBLISHED ON : செப் 22, 2025 12:00 AM

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்: தேர்தல்களில் நாம் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டோம். எனக்கு வயதாகி விட்டதால், கட்சி துவக்கியதாக சிலர் கூறினர். எனக்கு பின்னாலும் கட்சி இருக்க வேண்டும். அதனால் தான் தலைவர் களை உருவாக்குகிறேன்.
டவுட் தனபாலு: திராவிட கட்சிகளை எதிர்த்து வீராவேசமா கட்சியை துவங்கிட்டு, இப்ப, திராவிட கட்சிகளில் ஒன்றான, தி.மு.க.,வின் தலைமையகமான, 'அறிவாலயத்தில்' ஒரு அணியாக மாறிட்டு, எங்க இருந்து தலைவர்களை உருவாக்க போறீங்க... முதல்ல கட்சிக்கு தொண்டர்களை சேருங்க... தலைவர்களை உருவாக்குறதை அப்புறம் பார்க்கலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஒவ்வொரு முறை டில்லி செல்லும் போதும், வெளிப்படை தன்மையின்றி செயல்படுகிறார். மத்திய அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, அமித் ஷாவின் அடிமையாகச் செயல்படுகிறார். அதே நேரம், தி.மு.க., திறந்த புத்தகமாக உள்ளது; எல்லாவற்றிலும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுகிறது.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்டால், மத்திய, பா.ஜ., அரசுடன் ஒட்டி, உறவாடுவீங்க... தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டங்களை தொடர்ந்து புறக்கணிச்சுட்டு, அமலாக்கத் துறை, 'கிடுக்கிப்பிடி' போட்டால், அலறியடிச்சுட்டு, அந்த கூட்டத்தில் கலந்துக்கிறது என, 'திறந்த புத்தகமாக' தான் இருக்கீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க.,வில் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு, தி.மு.க., வில் சமீபத்தில் சேர்ந்துள்ள மருது அழகுராஜ்: இறைவன் தரும் எஞ்சிய ஆயுளை, முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து உழைக்க உறுதி பூண்டுள்ளேன். தி.மு.க., என்பது, அ.தி.மு.க., வின் எதிர் முகாம் அல்ல. தி.மு.க., வில் இருந்து, அ.தி.மு.க., உரு வான போது, இரு கட்சிகளையும் ஒருங்கிணைக்க, அன்றைய, புதுச்சேரி முதல்வர் பரூக் மரைக்காயர் துவங்கி, ஒடிஷா முதல்வர் பிஜு பட்நாயக் வரை பலர் முயற்சித்தனர். ஆனால், அது முடியாமல் போனது. இப்போது பழனிசாமி புண்ணியத்தில், இரு கட்சிகளும் ஒன்றிணை யும் சூழல் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வில் இருந்து இன்னும் பலர், தி.மு.க.,வுக்கு வருவர்.
டவுட் தனபாலு: கிட்டத்தட்ட, 20 வருஷங்களா, அ.தி.மு.க., முகாமில் இருந்து, தி.மு.க.,வை வசைபாடி கவிதைகளா எழுதி தள்ளிய உங்களை, 'மறப்போம்; மன்னிப்போம்'னு, தி.மு.க.,வுல ஏத்துக்கிட்டாங்க... 'இன்னும் பலர் வருவாங்க'ன்னு நீங்க சொல்றதை பார்த்தா, 'நிறைய பேரை இழுத்துட்டு வாங்க...' என்று உங்களுக்கு, 'ஸ்பெஷல் டூட்டி' போட்டிருக்காங்களோ என்ற, 'டவுட்' வருதே!