PUBLISHED ON : மே 29, 2026 04:47 PM

மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனின் குடியரசில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்கரை நகரமான உயிடாவில் உலகப் புகழ்பெற்ற 'மலைப்பாம்புகளின் கோயில்' அமைந்துள்ளது. மனிதர்கள் பொதுவாக அஞ்சும் ஒரு ஊர்வன உயிரினத்தை, தங்களின் ஆன்மீகக் காவலர்களாகவும், கடவுளின் தூதர்களாகவும் போற்றிப் பாதுகாத்து வரும் உலக அதிசயங்களில் இதுவும் ஒன்றாகும்.




இரவில் நகருக்குள் உலவ வரும் பாம்புகளை உள்ளூர் மக்கள் மிகவும் மரியாதையுடன் கையாளுவார்கள். ஒருவேளை பாம்பு வீடுகளுக்குள் சென்றால், அதை மெதுவாக அள்ளி எடுத்து மீண்டும் கோயிலிலேயே கொண்டு வந்து விட்டுவிடுவார்கள். ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த பாம்புகளுக்காகப் பெரிய திருவிழா மற்றும் தூய்மைப்படுத்தும் சடங்குகள் நடத்தப்படுகின்றன.
கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அங்குள்ள பயிற்சி பெற்ற வழிகாட்டிகள் வரவேற்று, பாம்புகளைப் பற்றிய பயத்தைப் போக்குகின்றனர். சுற்றுலாப் பயணிகள் இந்த பாம்புகளைத் தொட்டுப் பார்க்கவும், தங்களின் கழுத்தில் மாலையாக அணிந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இக்கோயில் வூடூ மதக் குருமார்கள் மற்றும் பாரம்பரியத் தலைவர்களால் பரம்பரையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. பெனின் அரசாங்கம் இக்கோயிலை நேரடியாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டாலும், இது நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலம் என்பதால் நிதியுதவியும், முழுமையான ஆதரவும் வழங்குகிறது.
பல நூற்றாண்டுகளாக இக்கோயில் இருந்தாலும், பாம்புகளின் எண்ணிக்கை 100-க்குள்ளேயே இருப்பதற்கு இயற்கையின் உணவுச் சங்கிலியே காரணம். இவை காடுகளுக்குச் செல்லும்போது பருந்துகள் போன்ற பிற விலங்குகளால் வேட்டையாடப்படுகின்றன. மேலும், இந்த வகை பாம்புகள் வருடம் ஒருமுறை மிகக் குறைந்த அளவிலேயே (4 முதல் 11) முட்டையிடும் என்பதால், இவற்றின் எண்ணிக்கை இயற்கையாகவே சமநிலையில் உள்ளது.
-எல்.முருகராஜ்
