PUBLISHED ON : மே 01, 2026 12:00 AM

தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர்: தமிழக காங்கிரசை புத்துயிர் பெறச் செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளோம். தேர்தல் முடிவுக்கு பின், தமிழகத்தில் நிர்வாக ரீதியாக, பல்வேறு பொறுப்புகள் மாற்றி அமைக்கப்படும். தொண்டர்கள் கூட தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறும் நிலை உருவாக்கப்படும். ஆட்சியில் பங்கு வேண்டும். காங்கிரஸ், ஆட்சி அதிகாரத்திலோ அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்திலோ இருக்குமே தவிர, அதிகாரமற்ற நிலையில் இருக்காது.
டவுட் தனபாலு: தொகுதி பங்கீடு விஷயத்தில் கோட்டை விட்டது போல, இனிமே இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்துட்டீங்க போலிருக்கு... தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காம போயிட்டா, 'ஆட்சியில் பங்கு தந்தால் தான் ஆதரவு கடிதம் தருவோம்'னு சொல்ல தயாராகிட்டீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!
த.வெ.க., நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்: உலக அளவில் இதுவரை பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, சோஷலிச புரட்சிகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் வரும் மே 4ம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின், 'விசில் புரட்சி' தான் நிகழும். சட்டசபை தேர்தலில், நாங்கள் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். யார் எத்தகைய கருத்துகளை கூறினாலும், த.வெ.க.,வின் வெற்றியை தடுக்க முடியாது.
டவுட் தனபாலு: இவர் சொல்வது மாதிரி விஜய் கட்சி ஜெயித்து, ஆட்சி அமைத்தால், கண்டிப்பா அது பெரிய புரட்சி தான்... ஆனா, தேர்தலின்போது தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் அள்ளிவிட்ட பணமழை, இவரது புரட்சி கனவை நிறைவேற்றுமா என்பது தான், இமாலய, 'டவுட்!'
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை: 'ஓட்டு எண்ணிக்கை முடிவில், 200 தொகுதிகளில், த.வெ.க.,வின் விசில் சத்தம் கேட்கும் என்பதெல்லாம், 'ஓவரான' சத்தம். விசிலுக்கான சத்தத்தை தாண்டி, அவர்களால் சத்தம் போட முடியாது. விஜய் காண்பது பிரமாண்டமான கனவு. மே 4 வரை அவர்கள் என்ன வேண்டுமானாலும் கனவு காணலாம். தற்போது விஜய் ஆன்மிக தேடலுக்கு செல்கிறார். தேர்தல் முடிவுகள் வந்த பின், அவர், 'ஷூட்டிங்' நடத்த இடம் தேடி செல்வார்.
டவுட் தனபாலு: விஜய் கட்சியின் எதிர்காலம் குறித்து கணிக்கிறாங்களே... அதே நேரம், 'அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணி தான் ஜெயித்து ஆட்சி அமைக்கும்'னு சொல்ல மாட்டேங்கிறாங்களே... தங்களது அணி வெற்றி மீது, இவங்களுக்கே நம்பிக்கை இல்லையோ என்ற, 'டவுட்'தான் வருது!

