PUBLISHED ON : மே 02, 2026 12:00 AM

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி., சுதா ராமகிருஷ்ணன்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்தவர் பேரறிவாளன். அவர் வழக்கறிஞராக, பார் கவுன்சிலில் பதிவு செய்த நாள் கருப்பு நாள். மரண தண்டனை குற்றவாளியான பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு இருந்தாலும், இது தவறான முன்னுதாரணம். அவர் வழக்கறிஞராக பதிவு செய்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மனு அனுப்பி இருக்கிறேன்.
டவுட் தனபாலு: முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 30 வருஷங்களுக்கும் மேலாக ஜெயிலில் இருந்தவர் பேரறிவாளன்... அவர் ஜெயிலில் இருந்து விடுதலையானப்ப, அவரை கட்டிப்பிடிச்சு வரவேற்ற முதல்வர் ஸ்டாலின், சுதாவுக்கு கண்டனம் தெரிவிப்பாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
lll
ஜம்மு - காஷ்மீரில் செயல்படும், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலத்தில் அதிகளவு மத்திய படைகள் குவிக்கப்பட்டன. அங்கிருந்த அதிகாரிகளும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். ஏன், அங்குள்ள மக்கள் மீதும், பாதுகாப்பு படையினர் மீதும் தேர்தல் கமிஷனுக்கு நம்பிக்கை இல்லையா?
டவுட் தனபாலு: மேற்கு வங்கத்தில், 15 ஆண்டுகளாக மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., ஆட்சிதான் நடக்குது... அங்கிருக்கும் பல அதிகாரிகள், கிட்டத்தட்ட ஆளுங்கட்சியினராகவே மாறிட்டாங்க... அவங்களை வச்சு தேர்தல் நடத்தியிருந்தா, அது நேர்மையா இருந்திருக்குமா... நாட்டின் மூத்த அரசியல் தலைவரான உங்களுக்கு இது தெரியாதா என்ற, 'டவுட்'தான் வருது!
lll
பத்திரிகை செய்தி: தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் காங்., ஏற்கனவே வென்ற தொகுதிகளில் கூட மீண்டும் வெற்றி பெறுவது சந்தேகம் தான் என்ற தகவல்கள், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு சென்றன. இதனால், கோபமான அவர், தி.மு.க., கூட்டணியை உறுதி செய்த தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை தொடர்பு கொண்டு, 'டோஸ்' விட்டுள்ளார்.
டவுட் தனபாலு: ஓஹோ... ராகுல் எப்படியும் தனக்கு டோஸ் விடுவார்னு செல்வப்பெருந்தகை முன்னாடியே யூகிச்சிட்டார் போலும்... அதனால தான், 'சட்டசபை தேர்தல் முடிஞ்சதும் மாநில காங்., தலைவர் பதவியில் இருந்து விலகிடுவேன்'னு அறிவிச்சார் என்பது, 'டவுட்' இல்லாம தெரிஞ்சிடுச்சு!
lll

